லேவியராகமம்
ஆசிரியர்
இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்ட வசனங்கள் மூலமாக மோசே தான் இதை எழிதினான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுகிறோம். அதிகாரம் 1:1, 2 வசனங்கள் இவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லும்படி யெகோவா சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் ஆகும் என்று சொல்கிறது. (27:34, ஒப்பிடுக 7:38; 25:1; 26:46) இந்த புத்தகத்தில் அனேக பிரமாணங்களுக்கு சம்பந்தப்பட்ட சரித்திரக் காரியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. (8:10; 24:10-23) லேவியராகமம் என்ற பதம் லேவி கோத்திரத்திலிருந்து வருகிறது. லேவியர்கள் ஆசாரிய ஊழியத்திற்கும் ஆராதனை செய்திடவும் வேறு பிரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஜனங்கள் எப்படி பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்றும், லேவியர்கள் மக்களுக்கு ஆராதனையில் எப்படி வழி நடத்த உதவ வேண்டும் என்றும் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும் இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் மலைப் பகுதியில் பாளையம் இறங்கி இருந்த நாட்களில் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
இந்த புத்தகம் ஆசாரியர்களுக்கும், லேவேயர்களுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களுடைய பின்வரும் சந்ததிக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
லேவியராகமம் புத்தகம், தேவன் மோசேயை ஆசரிப்பு கூடாரத்திலிருந்து அழைத்தது முதல் தொடங்குகிறது. மீட்கப்பட்ட ஜனங்கள், தங்கள் மத்தயில் வாசம் செய்யும் மகிமையான தேவனோடு எப்படி ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று இந்த புத்தகம் விளக்குகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தையும் அவர்களுடைய கலாச்சாரத்தையும் மத வழிபாடுகளையும் விட்டு வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தில் இருக்கிற கலாச்சாரத்தையும் மத வழிபாடுகளையும் பின்பற்றாமல் யெகோவா தேவனுக்கு உண்மையாய் வாழும்படி போதிக்கிறது. இப்படிப்பட்ட கலாச்சாரத்திலிருந்து யெகோவாவுக்கா பிரித்தெடுத்த வாழ்க்கையை உண்மையாய் வாழ இந்த புத்தகம் நிபந்தனைகளை கொடுக்கிறது.
மையக் கருத்து
உபதேசம்
பொருளடக்கம்
1. பலிகளைக்குறித்த விதிமுறைகள் — 1:1-7:38
2. தேவனுடைய ஆசாரியர்களுக்கு கொடுக்கபட்ட விதிமுறைகள் — 8:1-10:20
3. தேவனுடைய ஜனங்களுக்கு அளிக்கப்பட விதிமுறைகள் — 11:1-15:33
4. பலிபீடத்திற்க்கான விதிமுறைகளும் பாவநிவிர்த்தியின் நாளுக்கான விதிமுறைகளும் — 16:1-34
5. நடைமுறை பரிசுத்ததிற்கான விதிமுறைகள் — 17:1-22:33
6. ஓய்வு நாட்களுக்கான, பண்டிகைக்களுக்கான விதிமுறைகள் — 23:1-25:55
7. தேவனுடைய ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள கடைப்பிடிக்கவேண்டிய நிபந்தனைகள் — 26:1-27:34
அத்தியாயம் 1
தகனபலி
யெகோவா ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும். அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து, தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும். அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி, அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பார்களாக. அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 10 “அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, 11 யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 12 பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக. 13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 14 “அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன். 15 அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு, 16 அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, 17 பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.