நீதிமொழிகள்
ஆசிரியர்
சாலோமோன் ராஜா நீதிமொழிகளின் முக்கிய ஆசிரியர். நீதிமொழிகள் 1:1 லும், 10: 1 லும், 25:1 லும் சாலோமோனின் பெயர் காணப்படுகிறது. மற்ற ஆசிரியர்கள் ஆகூர், ராஜாவாகிய லேமுவேல் எசேக்கியா ராஜாவின் ஞானிகளும் எழுதியிருக்கிறார்கள். மற்ற வேத புத்தகத்தைப் போல் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை மறைமுகமாக சுட்டிகாட்டுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய நீதியின் வழியான தேவனுடைய வழியில் நடக்க போதிக்கிறது. சாலோமோன் தன் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொண்ட காரியங்களை எழுதிவைக்க தேவனால் ஏவப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 971 க்கும் 686 க்கும். இடையில் எழுதப்பட்டது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சாலோமோன் ராஜாவாக ஆட்சி செய்த காலத்தில் எழுதப்பட்ட நீதிமொழிகளில் சொல்லப்பட்ட ஞான வசனங்கள் எல்லாக் காலத்திற்கும் எல்லா கலாச்சார மக்களுக்கும் பொருந்தும் வண்ணமாக இருக்கிறது.
யாருக்காக எழுதப்பட்டது
இதில் எல்லா வயதினர்களுக்கும் சம்பந்தப்பட்ட காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இது ஞானத்தைத் தேடும் வாலிப ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்தமாயிருக்கிறது. கடைசியாக தேவ பக்தியாய் வாழ விரும்பும் எல்லாருக்கும் அறிவுரை தருகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காரியங்களுக்கு சொல்லப்பட்ட தேவனின் ஆலோசனைகளை சாலோமோன் இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளான். எந்த ஒரு காரியமும் விட்டுவிடாமல் உபதேசங்களை சொல்லியுள்ளான். உடலுறவுக் காரியங்களையும், வியாபாரக் காரியங்களையும், குறித்தும், தனிப்பட்ட நடக்கையைக்குறித்தும் அன்பைக்குறித்தும் ஒழுக்கத்தைக் குறித்தும் பணத்தைக்குறித்தும் கடனைக் குறித்தும் பிள்ளை வளர்ப்பைக்குறித்தும் சாராயம் குடிப்பதைக் குறித்தும் அரசியலைக்குறித்தும், பழிவாங்குவதைக்குறித்தும் தேவபக்தியாய் நடப்பதைக்குறித்தும் எல்லா ஞானமுள்ள ஆலோசனைகளை எழுதியிருக்கிறான்.
மையக் கருத்து
ஞானம்
பொருளடக்கம்
1. ஞானத்தின் மதிப்புகள் — 1:1-9:18
2. சாலோமோனின் நீதிமொழிகள் — 10:1-22:16
3. ஞானிகளின் வாசகங்கள் — 22:17-29:27
4. அகூரின் ஞான வார்த்தைகள் — 30:1-33
5. லேமுவேலின் ஞான வார்த்தைகள் — 31:1-31
அத்தியாயம் 1
மையக் கருத்து
தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,
புத்திமதிகளை உணர்ந்து,
விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;
விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;
நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,
ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.
ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள்
என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,
உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.
அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,
உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.
10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்
நீ சம்மதிக்காதே.
11 எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,
குற்றமில்லாமல் இருக்கிறவர்களை
காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்;
12 பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல்
அவர்களை முழுமையாக விழுங்குவோம்;
13 விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
14 எங்களோடு பங்காளியாக இரு;
நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்;
15 என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,
உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.
16 அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,
இரத்தம் சிந்த விரைகிறது.
17 எவ்வகையான பறவையானாலும் சரி,
அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.
18 இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,
தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
19 பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;
இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.
ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை
20 ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,
வீதிகளில் சத்தமிடுகிறது.
21 அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,
நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு,
பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:
22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,
நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே,
நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23 என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;
இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன்,
என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;
நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25 என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,
என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26 ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,
நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன்.
27 நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,
ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும்,
நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.
28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்;
அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,
யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30 என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;
என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள்.
31 ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;
தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32 அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,
மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்;
33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,
அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.