அத்தியாயம் 31
லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள்
ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;
அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:
என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,
என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்
ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.
திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,
சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,
தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்
உன்னுடைய வாயைத் திற.
உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,
சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.
10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?
அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.
11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;
அவனுடைய செல்வம் குறையாது.
12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,
நன்மையையே செய்கிறாள்.
13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,
தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.
14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;
தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,
தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;
தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,
தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;
இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.
19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;
அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,
ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.
21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,
தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;
மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது
பெயர் பெற்றவனாக இருக்கிறான்.
24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;
கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;
வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;
தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.
27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,
தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.
28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி,
அவளை பாக்கியவதி என்கிறார்கள்;
அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:
29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;
நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.
30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;
அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.