சங்கீதம் 46
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும்,
நாம் பயப்படமாட்டோம். (சேலா)
ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும்,
உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;
அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.
தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது;
அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்;
வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்;
இரதங்களை * நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
10 நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து,
நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்;
தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்,
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).
* சங்கீதம் 46:9 46:9 கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது.