சங்கீதம் 47
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.
எல்லா மக்களே, கைகொட்டி,
தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,
பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
மக்களை நமக்கு கீழ்படுத்தி,
தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;
நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;
தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்;
பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்;
அவர் மகா உன்னதமான தேவன்.