சங்கீதம் 65
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.
தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது;
பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது;
தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர்.
உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்;
உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
பூமியின் கடைசி எல்லைகளிலும்
தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற
எங்களுடைய இரட்சிப்பின் தேவனே,
நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.
வல்லமையைக் கட்டிக்கொண்டு,
உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி,
கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும்,
மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்;
காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;
தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்;
இப்படி நீர் அதைத் திருத்தி,
அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
10 அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து,
அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
11 வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்;
உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது.
12 வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது;
மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.
13 மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது;
பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது;
அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.